உலக அளவில் இன்று உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக
நடக்குமளவுக்கு மருத்துவத் துறை முன்னேறி இருக்கின்றது. ஒவ்வொரு நாடும்
இந்த உடல் உறுப்பு தானத்தை மிக உன்னதமாகக் கருதி, பாதுகாப்பாகவும்,
சட்டப்பூர்வமாகவும் தானம் செய்ய மக்களை அனுமதிக்கின்றது.
ஆனால் இந்த சிகிச்சை செய்ய உடலுறுப்பு தானம் செய்பவர்களிடமிருந்து
பெறப்படும் உறுப்புகளை குறிப்பாக விபத்தில் மூளைச்சாவு அடைந்த
ஒருவரிடமிருந்து பெறப்படும் இதயம் மற்றும் நுரையீரல் போன்றவற்றை 4 லிருந்து
6 மணி நேரத்திற்குள்ளும், கல்லீரலை 8 மணி நேரத்திற்குள்ளும், சிறுநீரகத்தை
24 மணி நேரத்திற்குள்ளும் மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட
வேண்டும். இல்லையெனில், அந்த உறுப்புக்கள் திசுச்சிதைவு அடைந்து
பயனற்றதாகிவிடும்.
தற்போது உள்ள பதப்படுத்தும் ரசாயனங்கள் மூலம் 4 லிருந்து 6 மணி நேரம்
மட்டுமே உறுப்புகளை பாதுகாப்பாக வைக்க முடியும். இதனால் தானமாக பெற்ற
உறுப்பை தொலைவில் இருப்பவர்களுக்கோ அல்லது வேறு நாடுகளில் உள்ளவர்களுக்கோ
பொருத்த முடிவதில்லை.
இந்த சிக்கலுக்கு தீர்வு கண்டுள்ளார் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த
டாக்டர் ஹேமந்த் தாட்டே. மும்பையின் தாதரில் பிறந்த இவர் ஹார்வர்டு
பல்கலைக்கழகத்தில் கடந்த 20 ஆண்டுகளாக இதய அறுவை சிகிச்சை நிபுணராக
பணியாற்றி வருகிறார். 21 கலவைகள் கொண்ட ரசாயன தீர்வை இவர்
கண்டுபிடித்துள்ளார். அதற்கு சோமா என்று பெயரிட்டுள்ளார். இவர்
கண்டுபிடித்துள்ள ரசாயனத்தின் மூலம் சுமார் 7 நாட்கள் வரை உறுப்புகளை
திசுக்கள் சிதைவடையாமல் பதப்படுத்தி வைக்க முடியும். முதற்கட்ட ஆய்வாக
பன்றிகளை வைத்து வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது. இன்னும் ஒன்றிரண்டு
ஆண்டுகளில் மருத்துவ சோதனைகளுக்கு பிறகு “சோமா” பயன்பாட்டுக்கு வர
வாய்ப்புள்ளதாக டாக்டர் ஹேமந்த் தெரிவித்தார்.
சோமா என்பதற்கு சமஸ்கிருத மொழியில் “அழியாத அமுதம்” என்று அர்த்தமாகும்.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment